search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்"

    தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியா கைது செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு ஆதரவாக தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #BJP #TamilisaiSoundararajan #Sophia
    தூத்துக்குடி:

    நெல்லை மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமானத்தில் 3-வது இருக்கையில் அமர்ந்து அவர் பயணம் செய்தார்.

    அதே விமானத்தில் 8-வது இருக்கையில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த சோபியா (வயது 28) என்ற பெண் அமர்ந்திருந்தார். அப்போது சோபியா திடீரென பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார். இதனால் விமானத்தில் பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து விமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தை அடைந்ததும் தமிழிசை சவுந்தரராஜன், சோபியாவிடம் கோ‌ஷம் எழுப்பியது தொடர்பாக கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தமிழிசைக்கு ஆதரவாக அவருடன் வந்த பா.ஜனதா நிர்வாகிகளும் சேர்ந்து பேசியதால் பரபரப்பு உண்டானது. இதைத்தொடர்ந்து விமானத்தில் மாணவி கோ‌ஷம் எழுப்பியது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அலுவலகத்திலும் புகார் செய்தார்.

    புதுக்கோட்டை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆராய்ச்சி மாணவி சோபியாவிடம் விசாரணை நடத்தினர். தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் (ஐ.பி.சி.290), பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழச்செய்யும் வகையில் பேசுதல் (ஐ.பி.சி.505(1)(பி), போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (75(1)(சி) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மாணவி சோபியா மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை தூத்துக்குடி 3வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி வீட்டுக்கு அழைத்து சென்று அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து சோபியாவை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவரை நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதாக சோபியா தெரிவித்தார். இதனால் அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சோபியாவை இன்று காலை தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல்கள் சிலர் சந்தித்து பேசினர். அப்போது அவர்களுடன் ஜாமீன் மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்தார்.

    கைதான சோபியா எம்.எஸ்.சி பட்டப்படிப்பு முடித்து உள்ளார். தொடர்ந்து கனடாவில் உள்ள மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். நேற்று கனடாவில் இருந்து இந்தியா திரும்பிய மாணவி சோபியாவை அவருடைய பெற்றோர் சென்னையில் இருந்து ஊருக்கு அழைத்து வந்தபோது இந்த சம்பவம் நடந்து உள்ளது.

    இதனிடையே ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். சோபியாவை விடுதலை செய்யவேண்டும், சோபியாவை மிரட்டிய பா.ஜ.கவினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். #BJP #TamilisaiSoundararajan #Sophia
    ×